
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், அம்பர்நாத் தாலுகா குஷிவ்லி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் சம்பவத்தன்று காலை தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரும், 22 வயது இளம்பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி உடனடியாக ஹில்லைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரத்தில் பிணமாக தொங்கிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய விசாரணையை தொடங்கினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 2 பேரும் காதலர்கள் என்பது தெரியவந்தது. கல்யாண் கிழக்குப்பகுதியில் உள்ள சின்ஞ்பாடா பகுதியில் வசித்து வந்த 2 பேரும் ஒன்றாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த புதன்கிழமை மாலை வழக்கம்போல் பணி முடிந்து இருவரும் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன குடும்பத்தினர் அவர்களை அருகில் உள்ள இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் தான் அவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், "முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர இளம்ஜோடிகளை அவர்கள் ஒரு ஆண்டு காத்திருக்குமாறு கூறி உள்ளனர். இந்தநிலையில் தான் அவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து எந்த தற்கொலை குறிப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
அவர்களின் உறவினர்கள் மற்றும் உடன் வேலை பார்க்கும் சகஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இருவரின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனரா அல்லது அவர்களை யாரும் கொலை செய்து உடலை மரத்தில் தொங்கவிட்டு சென்றனரா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.