மனைவி, மூத்த மகனை சுட்டுக் கொன்றுவிட்டு கர்நாடகா தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; அமெரிக்காவில் பயங்கரம்

5 hours ago 3

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்த தனது மனைவி, மூத்த மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, கர்நாடகா தொழிலதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ஷ்டவசமாக இளைய மகன் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம், நியூகேஸ் பகுதியில் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (57), தனது மனைவி ஷ்வேதா பன்யம் (44), மகன் துருவா கிக்கேரி (14), மற்றொரு 8 வயது மகனுடன் வசித்து வந்தார்.

மைசூரில் உள்ள  ஜெயச்சாமராஜேந்திர பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற ஹர்ஷவர்தனா கிக்கேரி, அமெரிக்காவின் சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரோபோட்டிக்ஸ் துறையில் பணியாற்றிய இவர், பல விருதுகளைப் பெற்றவர். கடந்த 2017ம் ஆண்டு, ஹர்ஷவர்தனா மற்றும் அவரது மனைவி ஷ்வேதா பன்யம் இந்தியாவுக்குத் திரும்பி, மைசூரின் விஜயநகரில் ‘ஹோலோவேர்ல்டு’ என்ற ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தை நிறுவினர். ஷ்வேதா நிறுவனத்தின் தலைவராகவும், ஹர்ஷவர்தனா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினர். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, எல்லைப் பாதுகாப்பிற்கு ரோபோக்களைப் பயன்படுத்துவது குறித்து கூட ஹர்ஷவர்தனா கிக்கேரி விவாதித்துள்ளார். ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் ஹோலோவேர்ல்டு நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ந்து, ஹர்ஷவர்தனா தனது குடும்பத்தினருடன் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பினர். அங்கு அவர்கள் ‘ஹோலோசூட்’ என்ற புதிய ஏஐ-அடிப்படையிலான முழு உடல் இயக்கப் பதிவு உடையை உருவாக்கினர். இந்நிலையில் நியூகேஸ் வீட்டில் இருந்த ஹர்ஷவர்தனா கிக்கேரி, தனது மனைவி ஷ்வேதா பன்யம், அவர்களது மூத்த மகன் துருவா கிக்கேரி ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று உடல்களையும் கைப்பற்றி கிங் கவுண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த துயர சம்பவம் நடந்த போது, தம்பதியினரின் 8 வயது இளைய மகன் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து கிங் கவுண்டி ஷெரிப் அலுவலக செய்தித் தொடர்பாளர் பிராண்டின் ஹல் கூறுகையில், ‘இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரிக்கிறோம். குடும்ப பிரச்னை காரணமாக இச்சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் ஹோலோவேர்ல்டு நிறுவனத்தின் மூடல் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் மனைவி, மூத்த மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தொழிலதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரது இளைய மகன், சம்பவம் நடந்த போது வீட்டில் இல்லை. ஹர்ஷவர்தனா கிக்கேரியின் இந்த கொடூர செயல், தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறினார்.

ஹோலோவேர்ல்டு நிறுவனத்தின் மூடல் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் மனைவி, மூத்த மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தொழிலதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

The post மனைவி, மூத்த மகனை சுட்டுக் கொன்றுவிட்டு கர்நாடகா தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; அமெரிக்காவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article