மன அழுத்தம் தீர சத்குரு சொல்வது என்ன?

5 hours ago 3

மன அழுத்தம் தீர ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது:-

நாட்டின் பிரதமரைக் கேட்டால், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறுவார். அலுவலகத்தில் எளிமையான வேலைகளைச் செய்யக்கூடிய கடைநிலை ஊழியரைக் கேட்டால், அவரும் தான் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறுவார். மன அழுத்தம் என்பது நீங்கள் செய்யக்கூடிய வேலையின் தன்மையால் வருவதில்லை. உங்களை நீங்கள் சரியாகக் கையாளத் தெரியாததால்தான் மன அழுத்தம் வருகிறது.

உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் சக்திநிலையை எப்படி வைத்துக்கொள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. எனவேதான் உங்களுக்கு மன அழுத்தம் வருகிறது. ஒருவர் தனக்குள் ஒரு தெளிவான தன்மையில் இருக்கும்போது, மன அழுத்தம் என்பதே வராது.

நீங்கள் உங்களை எப்போதும் தளர்வுநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் பணி உங்களைப் பாதிக்கக் கூடாது. உடலளவில் நீங்கள் களைப்படையலாம். ஆனால், அது உங்களை மன அழுத்தத்தில் கொண்டு விடக்கூடாது.

தளர்வு நிலையில் இருப்பதற்காக உங்கள் பணிகளை நீங்கள் குறைத்துக்கொள்ளக் கூடாது. தீவிரமாக வேலை செய்பவராகவும், அதே நேரத்தில் தளர்வானவராகவும் இருப்பதே மிகவும் சிறந்தது. தளர்வாக இருப்பதற்காகப் பணிகளைக் குறைத்துவிட்டால் அதில் எந்த சிறப்பும் இல்லை.

இதற்கு தியானம் மிகவும் உதவி செய்யும். தியானம் மன அழுத்தத்துக்கு மட்டும் தீர்வாக இல்லாமல், அடுத்த பரிமாணத்துக்கு நீங்கள் நகரவும் உதவி செய்யும். அந்த அடுத்த பரிமாணத்தில் மன அழுத்தம் என்பதே கிடையாது. சில எளிய யோகப் பயிற்சிகளைச் செய்தாலே, 4 மாதங்களுக்குள் உங்கள் நாடித்துடிப்பு 8 முதல் 20 எண்ணிக்கை குறைந்துவிடும். இதிலிருந்தே, உங்கள் உடல் துடிப்பாகவும் அதே நேரத்தில் தளர்வாகவும் இருக்க முடியும் என்பதை அறிய முடியும்.

எந்தப் போராட்டமும் இல்லாமல், உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சி நிலை ஆகியவை இந்த வாழ்க்கையின் சவால்களை மேற்கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்கள் உள்தன்மையை ஒரு குறிப்பிட்ட வழியில், ஒரு குறிப்பிட்ட உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும். உள்நிலையில் போராட்டம் இல்லாதபோதுதான், உள்நிலையில் பிரச்சினைகள் இல்லாதபோதுதான், வெளிப்புறப் பிரச்சினைகளையும் நீங்கள் நன்கு கையாள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article