புதுடெல்லி,
இந்த பட்ஜெட்டில் அதிகாரத்துவம் மகிழ்ச்சியடையும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும், பீகார் மக்களையும் கவருவதற்கு பா.ஜ.க. முயற்சிக்கிறது. இந்த பட்ஜெட்டானது, பீகாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் வரவேற்கப்படும். அதைத் தவிர பிற மாநில மக்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க, எம்.பி.,க்களின் கைதட்டல்களுடன் கூடிய, நிதிமந்திரி நிர்மலா சீதாராமனின் ஆறுதலான வார்த்தைகள் மட்டும் தான்.
கடந்த 2024-25ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட வருவாய் ரூ.41,240 கோடியும், திருத்தப்பட்ட நிகர வரி வருவாய் ரூ.26,439 கோடியும் குறைந்துள்ளது. அதேபோல, மொத்த செலவினங்களும் ரூ.1.04,025 கோடியாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மூலதன செலவு ரூ.92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் சுகாதாரத்துறைக்கு ரூ.1,255 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,584 கோடியும், சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.10,019 கோடியும், வேளாண்துறைக்கு ரூ.10,992 கோடியும், கிராமப்புற மேம்பாடு ரூ.75,133 கோடியும், நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு ரூ.18,907 கோடியும், வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ.1,894 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையோர் பிரிவினருக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர்.
நிதிமந்திரியோ அல்லது பிரதமரோ தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையை பொருட்படுத்துவதில்லை என்பது தெளிவாகிறது. இந்த பட்ஜெட்டில் அதிகாரத்துவம் மகிழ்ச்சியடையும். மக்கள் நடவடிக்கைகள் மீதான அரசாங்கத்தின் பிடி இறுக்கமாகி வருகிறது" என்று அவர் கூறினார்.