மதுரை: மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை மூடாமல் வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அப்பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை கே.கே.பகுதியில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் இருக்கக்கூடியவர்கள் மற்றும் பெரும்பாலும் பணிக்கு செல்லக்கூடியவர்கள் தங்களது குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஆருத்ரா என்ற 4 வயது குழந்தையை வழக்கம் போல காலையில் பள்ளியில் விட்டு சென்றனர். பின்னர் குழந்தை பள்ளியில் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென்று பள்ளி பின்னால் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. இதையறிந்த பள்ளி நிர்வாகத்தினர் குழந்தையை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பள்ளி உரிமையாளர் திவ்யாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
The post மதுரையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு: பள்ளி உரிமையாளர் கைது! appeared first on Dinakaran.