மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே களிமண்ணால் தயார் செய்யப்படும் கொலு பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கும் நிலையில் அங்கு கைவினை கிராமம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விளாச்சேரியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக 150க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளிலேயே களிமண் பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அங்குள்ள கண்மாயில் எடுக்கப்படும் களிமண் கொண்டு செய்யப்படும் பொம்மைகள், கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலுவில் வைப்பதற்காக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நவராத்திரி கொளு பொம்மைகள் தவிர திருமணம் காதணி விழா நிச்சயதார்த்தம் கல்யாண ஊர்வலம் போன்ற கருத்துகளின் அடிப்படையில் களிமண் பொம்மைகள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. தனித்துவம் பெற்ற விளாச்சேரி பொம்மைகளுக்கு கடந்த 21ம் தேதி புவிசார் குறியீடு கிடைத்துள்ளதற்கு கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் என பல்வேறு சிறப்பு பெற்ற கோவில்களின் அருகில் உள்ளதால் விளாச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்கு கைவினை கிராமத்தை உருவாக்கினால் அது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் மதுரையின் ஒரு அடையாளமாகவும் இருக்கும் என்று கைவினை கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மதுரை விளாச்சேரி கொலு பொம்மைக்கு புவிசார் குறியீடு: கைவினை கிராமத்தை உருவாக்கக் கோரிக்கை appeared first on Dinakaran.