
மதுரை,
கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாவது;
"சித்திரை திருவிழாவில் அழகர் மலையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வழி நெடுகிலும் அனைத்து மக்களும் அவரை தூக்குகிறார்கள். அதிகமான இடங்களில் அன்னதானம், நீர் மோர் வழங்குகிறார்கள். இதில் எங்குமே சாதிய பாகுபாடு இல்லை. இதேபோல் அனைத்து இடங்களிலும் இருக்கலாமே?
மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும். திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறைதான் கடைபிடிக்கப்பட வேண்டும். திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்."
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.