மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விலங்குகள் ஆய்வகத்தில் மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு வெண் பன்றிகள் பயன்படுத்த அனுமதி

3 weeks ago 5

மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி விலங்குகள் ஆய்வகத்தில், வெண் பன்றியை வைத்து நடத்தப்படும் குடல் வால்வு அறுவை சிகிச்சை பயிற்சிக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இதயம், சிறுநீரகம், கல்லீரல் வரை அத்தனை உள் உறுப்புகளுக்குமான அறுவை சிகிச்சைக்கு அனுமதி அடுத்தடுத்து அனுமதி பெறப்பட உள்ளது.
மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி 1954 ஆக.2ல் திறக்கப்பட்டது. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இக்கல்லூரி, உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்றது.

எம்பிபிஎஸ், பட்டப்படிப்புடன், எம்டி.யில் பொது, மகப்பேறு மற்றும் மகளிர் நோய், உடலியங்கியல், நோய் குறியியல், குழந்தைகள், நுண்ணுயிரியல், மருந்தாக்கியல், தடய அறிவியல், மனநலம், மயக்கவியல், பொது அறுவையியல், உடற்கூற்றியல், கண் அறுவையியல், காது, மூக்கு, தொண்டை அறுவையியல், எலும்பு முறிவு அறுவையியல் மேற்படிப்புகள் இங்குள்ளன.
மேலும், உயற்சிறப்புக் கல்வியாக டிஎம்,மில் நரம்பியல், இதயம், எம்சிஎச், சில் நரம்பு அறுவையியல், ஒட்டுறுப்பியல், இதய அறுவையியல், குழந்தை நல அறுவையியலும் கற்றுத்தரப்படுகிறது.

இத்துடன் டிசிஓ, டிசிஎச், டிஎல்ஓ, டிஏ, டிஆர்த்தோ, டிஎம்ஆர்டி, டிஓ, டிப்,எம், என ஏராள பட்டயப்படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது. இம்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு மைய, அவசர சிகிச்சை மற்றும் பல்நோக்கு மருத்துவமனைகளுடன், பாலரெங்காபுரம் அரசு பொது மருத்துவமனை மற்றும் தோப்பூர் நெஞ்சக, தொற்று நோய்கள், காலரா சேமிப்பு மைய மருத்துவமனைகளிலும் பணி வழங்கி, பயிற்சி மேற்கொள்கின்றனர்.

மருத்துவ மாணவர்கள், அறுவை சிகிச்சை சார்ந்த பயிற்சி டாக்டர்கள் சிறப்பு பயிற்சி பெறும் வகையில் மருத்துவக் கல்லூரியின் ஆய்வகங்கள் விளங்கி வருகிறது. இவ்வகையில் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த விலங்குகள் ஆய்வகத்தில் பன்றியை வைத்து நடத்தப்படும் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய அறுவை சிகிச்சை டாக்டர்கள் சங்க மதுரை கிளை செயலாளர், மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் முத்துக்குமார் கூறியதாவது: விலங்குகளை அறுவை சிகிச்சை செய்து, மனிதர்களுக்கான அறுவை சிகிச்சைக்கு பயிற்சி பெறலாம்.

இவ்வகையில், பன்றி உள்ளுறுப்புகள் மனிதருடன் ஒத்துப்போகிறது. கல்லீரல், மண்ணீரல், குடல், வயிறு, இதயம், சிறுநீரகம் என எல்லாமும் மனிதருக்கானதாகவே இருக்கிறது. முயல், எலி கொண்டு ஆய்வு செய்து, அறுவை சிகிச்சை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், முதன்முறையாக இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகளில் பெரிய உயிரினமாக பன்றியை பயன்படுத்தி பயிற்சி பெறும் வசதி மதுரைக்குத்தான் 2 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு கிடைத்திருக்கிறது.

இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணைத் துறையின் விலங்குகள் மீதான பரிசோதனைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுவதற்கான குழுவிலிருந்து (சிசிஎஸ்சிஏ) உரிய அனுமதியைப் பெற்ற பிறகே இப்பயிற்சி மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடத்தப்படுகிறது. இந்த லேப்ராஸ்கோபிக்கில் குடல் வால்வு அறுவை சிகிச்சை பயிற்சிக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் இதயம், சிறுநீரகம், கல்லீரல் வரை அத்தனை உள்ளுறுப்புகளுக்குமான அறுவை சிகிச்சை பயிற்சிக்கான அனுமதி அடுத்தடுத்து பெறப்படும்.

அறுவை சிகிச்கை பயிற்சிக்கென கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொற்று சோதனை நடத்தி, உரிய தடுப்பூசி போடப்பட்டுடு, தகுந்த எடை கொண்டதாக உரிய சான்றுடன் வெண் பன்றி பெறப்படும். பின்னர் அதற்கு ஒருவாரம் நல்ல உணவிட்டு, சுகாதாரம் காத்து பராமரிக்கப்பட்ட பிறகே, கால்நடை மயக்கவியல் டாக்டர்களின் மேற்பார்வையில்அறுவை சிகிச்சை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும். மதுரை ஆய்வகத்தில் கால்நடை நிரந்தர டாக்டர்கள் இருவர் உள்ளனர். ஓராண்டுக்கு 8 பன்றிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனுக்கான அறுவை சிகிச்சையைப்போலவே, இந்த வெண் பன்றி மீதான அறுவை சிகிச்சை பயிற்சியும் மாணவர்களுக்கு மிகுந்த கவனத்துடன் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விலங்குகள் ஆய்வகத்தில் மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு வெண் பன்றிகள் பயன்படுத்த அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article