விருதுநகர்: சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடித்த ஊடகத்தினரை “கேமராவை பிடுங்கி உடைத்துப் போடுங்கள்” என ஆவேசத்துடன் வைகோ உத்தரவிட்டார். தொடர்ந்து ஊடகத்தினரை கட்சியினர் தாக்கினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. பேசி முடித்ததும், சென்னை செல்ல அவசரமாகப் புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்த பலரும் அரங்கிலிருந்து வெளியேறினர். தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போதும், அரங்கிலிருந்த ஏராளமானோர் வெளியேறினர். இதனால் ஆவேசமடைந்த வைகோ “உள்ளே வந்து உட்காருங்கள், இல்லையெனில் வீட்டுக்குப் போங்கள்” என கடிந்துகொண்டார்.