
பிரதமர் நரேந்திர மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ள மனோ தங்கராஜை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தான் இந்து என்பதில் பெருமிதம் கொள்பவர். அதே நேரத்தில் மற்ற மதங்கள் அனைத்தையும் சமமாக மதித்துப் போற்றுபவர். இந்து மத பண்டிகைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுபவர். அனைத்து மதங்களின் தலைவர்களையும் அவ்வப்போது சந்தித்து உரையாடுபவர்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் சென்று வழிபட்டவர். அஜ்மீர் தர்காவுக்கு மலர் போர்வை தந்தவர். மதங்களின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தையும், கட்டாய மதமாற்றத்தையும்தான் பா.ஜ.க. எதிர்க்கிறதே தவிர, எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை. ஆனால், மதச்சார்பின்மைதான் எங்கள் உயிர் மூச்சு என சொல்லும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்கிறார். இன்று பக்ரீத் திருநாளுக்கும் வாழ்த்து சொன்னார். ஆனால், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்வதி்ல்லை. அனைவருக்கும் பொதுவான முதல்-அமைச்சர் ஏன் இப்படி பாகுபாடு காட்டுகிறார்? இந்து மதத்தின் மீது அவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என பலமுறை கேட்டும் நேரடியான பதில் இல்லை.
இந்நிலையில், பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த வாழ்த்துச் செய்தியை கேலி செய்யும் வகையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "மோடியின் பக்ரீத் வாழ்த்து - போலி வேஷம்! மோடி மத அடிப்படையில் இரட்டை வேடமிடுவது உலகறிந்த உண்மை. நடிகர் வடிவேல் பாணியில் - ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னை மரத்துல ஒரு குத்து என்பது போல, காந்திக்கு ஒரு மாலை, கோட்சேக்கு ஒரு மாலை அணிவிப்பதில் கூச்சமே இல்லாத வித்தைகாரர். காலையில் கண்ணகி வேடம், மாலையில் தில்லுமுல்லு" என விமர்சித்திருக்கிறார்.
இது கடும் கண்டனத்திற்குரியது. இந்து மதத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, இஸ்லாமிய பண்டிகைக்கு வாழ்த்துச் சொன்னதை, கிறிஸ்தவரான தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் மிக மோசமாக தரம் தாழ்ந்து கேலி செய்திருக்கிறார். இதன் பின்னணியில் மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சதித் திட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு "கோவில் திருவிழாக்களுக்கு கூட்டமாக மக்கள் செல்வது நாகரிக செயல் அல்ல" என பேசி, தனது வெறுப்பை கக்கியிருந்தார்.
கடந்த 2023-ல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் தமிழ் ஆதினங்களை பிரதமர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியதையும் மனோ தங்கராஜ் அறுவெறுக்கத்தக்க வகையில் கேலி செய்திருந்தார். இப்படிப்பட்டவரிடம் நாகரிகத்தை, மத நல்லிணக்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? மனோ தங்கராஜ் அமைச்சர் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டார்? மீண்டும் ஏன் சேர்க்கப்பட்டார்? மீண்டும் அமைச்சரானதும் ஏன் இப்படி மத மோதலை, சமூக அமைதியை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார் என்பதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி மீது வெறுப்பை கக்கிய அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.