மண்ணுக்குள் பதித்த குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி

1 day ago 3

கோத்தகிரி : கோத்தகிரி நகர மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு குடிநீர் மண்ணுக்குள் பதித்த குழாய்களை இணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த ஈளாடா தடுப்பணை அடிக்கடி வறண்டு வந்ததால் கோத்தகிரி பகுதியில் கோடை காலத்தில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து 2 முறை தடுப்பணை தூர் வாரப்பட்டு, பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்டு, அங்கிருந்து கோத்தகிரிக்கு தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் கோத்தகிரி நகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொலைநோக்கு திட்டமாக அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டம் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சுமார் 10.60 கோடி ரூபாய் செலவில் கொண்டு வரப்பட்டது.

கோத்தகிரி பகுதி குடியிருப்புகளுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கும் வகையில் அளக்கரை மற்றும் ஈளாடா ஆகிய 2 நீராதாரங்களில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்து, முறையாக விநியோகம் செய்வதற்காக மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்படி ஈளாடா தடுப்பணை பகுதியில் இருந்து கோத்தகிரிக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக பெரிய குழாய்கள் பதிக்கும் பணி, தண்ணீரை சேகரித்து வைப்பதற்காக சக்திமலை பகுதியில் 2 நீர்த்தேக்க தொட்டிகள், இரண்டு நீர் உந்து நிலையங்களில் 2 தொட்டிகள், ஹோப்பார்க், தங்கமலை, லூக்ஸ் சர்ச் ஆகிய இடங்களில் தலா ஒரு தொட்டி என மொத்தம் 7 தொட்டிகள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

தற்போது 9 வார்டுகளை சேர்ந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக குடிநீர் குழாய்களை நிலத்தில் பதிக்கும் பணி மற்றும் அந்த குழாய்களை தொட்டியுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்றன. குடியிருப்புகளுக்கு பிளாஸ்டிக் குழாய்களை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ஏற்கனவே சாலையோரங்களில் பாதிக்கப்பட்டுள்ள ராட்சத இரும்புக்குழாய்களை இணைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மண்ணுக்குள் பதித்த குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article