சுராசந்த்பூர்: மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்ற கலவரத்தில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதால் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். இதையடுத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு படையினரும் ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம், மோங்ஜாங் பகுதியில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்த 72 வயது மூதாட்டி உள்பட 4 பேரை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றார். இதில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் தெங்தோங் ஹாகிப் என்ற தாபி,செய்கோகின், லெங்கோஹாவ், பால்ஹிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், மிக அருகில் நின்று 4 பேரையும் மர்ம நபர் சுட்டு கொன்றுள்ளார். அந்த இடத்தில் 12 தோட்டாக்கள் கிடந்தன. போலீஸ் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படையினர் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதற்கிடையே ஐக்கிய குக்கி தேசிய விடுதலை முன்னணி(யுகேஎன்எல்ஏ) என்ற அமைப்பு படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை மூதாட்டி உட்பட 4 பேர் சுட்டு கொலை: தாக்குதலுக்கு குக்கி அமைப்பு பொறுப்பேற்பு appeared first on Dinakaran.