மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் மதுக்கடையை மாற்ற -வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 months ago 10

சென்னை : மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் மதுக்கடையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “2019-ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த போதும், கடையை காலி செய்யாதது ஏன்?இதை கேள்வி கேட்டால் காவல் துறையினரை வைத்து வழக்கு தொடர்வீர்களா?. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் மதுக்கடையை மாற்ற வேண்டும்.குத்தகை காலம் முடிந்துவிட்டால் டாஸ்மாக் கடைகளை காலி செய்ய வேண்டும் என நிர்வாக இயக்குநருக்கு ஐகோர்ட் உத்தரவிடுகிறது,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் மதுக்கடையை மாற்ற -வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article