
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆனி மாத பவுர்ணமி திதியை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வரத் தொடங்கினர். கடல் மற்றும் நாழி கிணறு ஆகிய புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை நேரம் நெருங்க, நெருங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.