போலீஸ் வேலையை கவனிக்காமல் சொந்த தொழில் செய்யும் ‘விஐபி காவலரை’ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 day ago 4

‘‘தந்தை-மோதல் பிரச்னையால் எந்த பக்கம் சாய்வது என தெரியாமல் கட்சியின் நடுநிலைவாசிகள் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கட்சியில் தந்தை, மகன் மோதலால் மாற்றங்கள் ஆர்டர் பறக்கிறதாம்.. நிறுவனர் ஆர்டர் போட, அன்பின் ஆதரவாளர்களோ கோஷ்டி கூட்டங்களை நடத்தி எதிர்காலம் நாங்கள்தான் என கூறுகிறார்களாம். மேல்மட்டத்தில் நீடித்த மோதல் தொண்டர்கள் வரையிலும் பரவியதால் கட்சியின் நல விரும்பிகள் செய்வதறியாது திகைப்பில் உள்ளார்களாம். நெட்டிசன்களின் மீம்ஸ் ஒருபுறம், நீடிக்கும் மோதல் மறுபுறம், கிளைகளில் பற்றி எரியும் புகைச்சல் போன்றவற்றால் எந்த பக்கம் சாய்வதென தெரியாமல் கட்சியின் நடுநிலைவாசிகள் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்களாம். சமீபத்தில் தோட்டத்துக்கு வந்த மணியான மூத்தவர், நா தழுதழுத்தபடி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாங்கள் விடுபட வேண்டுமெனில், ஒன்று யார் கண்ணிலும் படாமல் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் தெரியாம எங்காவது ஓடிடணும்… அப்படி இல்ல என்று சொன்னா நான் உயிரோடு இருக்கக் கூடாதுன்னு சொன்னாராம். தந்தை, மகன் சந்திப்பு மில்லியன் டாலர் கேள்வியாகிவிட்ட நிலையில், கசப்பாகும் மாங்கனியால் தொண்டர்களும் படிப்படியாக சோர்வடைகிறார்களாம். இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கலாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கிகள் பங்கு பிரிச்ச மேட்டர்ல சென்னைக்கு போன புகாரால் டிரான்ஸ்பர் நடந்திருக்குதாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல அக்னி நட்சத்திரம் முடிஞ்சும் வெயில் கொளுத்தி வர்ற மாதிரி, காக்கிகள் வட்டாரத்துலயும் தினமும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து விட்டு, விட்டு பத்திக்கிட்டே இருக்குது.. வெயிலூர் மாவட்ட காக்கிகள் ஆபிஸ்ல, கீழ் தளத்துல சமூகத்தோட நீதிப்பிரிவு இயங்கி வருது.. இந்த பிரிவு காக்கிகள் தான் சமூக விழிப்புணர்வுகள் ஏற்படுத்துறது, மலைவாழ் மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துறதுன்னு செஞ்சி வர்றாங்க.., இதுக்காக கவர்மெண்ட்டும் அவங்களுக்கு நிதி வழங்குறாங்களாம்.. இப்படி வந்த நிதியில அந்த பிரிவுல பணிபுரிஞ்ச பெண் காக்கியும், ஸ்டார் காக்கியும் சேர்ந்து பங்கு பிரிச்சுக்கிட்டதாக, சென்னை வரைக்கும் புகார்கள் போயிருக்குது.., அப்புறம் உள்ளூர் விசாரணையும் சமீபத்துல நடந்திருக்குது.. விசாரணையில உண்மைதான்னு தெரியவந்துச்சாம்.. அதன்பிறகு அந்த பெண் காக்கியும், ஸ்டார் காக்கியையும் மாவட்டத்தை விட்டே தூக்கி அடிச்சிருக்காங்க.. கொளுத்துற வெயில்ல இப்ப இந்த டிரான்ஸ்பர் மேட்டர் தான் மாவட்ட காக்கிகள் ஆபிஸ்ல பரபரப்பாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘படிப்படியாக உயர்ந்து பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்ததால் என்னை எந்நேரமும் வந்து சந்திக்கலாம் என சொன்ன தலைவரை பார்க்க முடியாமல் தவிக்கிறாங்களாமே ரத்தத்தின் ரத்தங்கள் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் கட்சிக்கு மா.செ. இல்லையாம்.. ரெண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அதிகாரம் யாரிடம் இருப்பது என்பது தெரியாத நிலையில் அனுபவமிக்க ஒருவரை முற்றிலுமாக ஓரம் கட்டிட்டாங்களாம்.. அவரை தூக்கப்போறதா கட்சிக்காரங்களிடையே ஒரே பேச்சா நிலவுது.. அதே நேரத்தில் ரத்தத்தின் ரத்தங்கள் மன கொதிப்பிலும் இருக்காங்களாம்.. சாதாரண ஊரில் இருந்து படிப்படியாக உயர்ந்து நாட்டை ஆளும் பதவியையும், வரலாற்று மிக்கதான கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பும் என்னை தேடி வந்தது.. உங்களில் ஒருவன் நான். எனவே நீங்கள் எந்நேரமும் என்னை வந்து சந்திக்கலாம் என இலைக்கட்சி தலைவர் சொன்னாராம்.. ஆனால் இப்போ தொண்டர்கள் அவரை பார்க்கணும்ன்னா பல்வேறு தடைகளை தாண்டி செல்ல வேண்டியதாக இருக்குதாம்..
சொந்த வீட்டில் இலைக்கட்சி தலைவர் இருக்கும்போது, பர்த்டே, மேரேஜ்டேவுக்கு குடும்பத்தோடு வந்து ஆசி வாங்க வரும் தொண்டர்களுக்கு பல்வேறு நெருக்கடி இருக்குதாம்.. யாருக்கிட்ட கேட்டு தலைவரை பார்க்க வந்தீங்க என்ற கேள்வியோடு வட்டத்திடம் சொல்லிட்டு, அவரை அழைச்சிட்டு வாங்கன்னு விரட்டி விடுறாங்களாம்.. இதென்னடா புதுசோதனையா இருக்கேன்னு மேலிடத்தை வட்டம், பகுதியை தொடர்பு கொண்டால் செல்போன் அழைப்பை எடுப்பது இல்லையாம்.. அப்படியே எடுத்தாலும் டெத்துல இருக்கேன், வெளியூருல இருக்கேன்னு சொல்லிட்டு போனை வச்சிடுறாங்களாம்.. இதனால மாங்கனி மாநகர தொண்டர்கள் ரொம்பவே அப்செட்டாத்தான் இருக்காங்களாம்..
இதெல்லாம் இலைக்கட்சி தலைவருக்கு தெரியுமா, தொண்டர்களின் சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்தால் கட்சி வேலை எப்படி நடக்கும் என்ற பெரும் கேள்வியோடு இருக்காங்களாம் கட்சிக்காரங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போலீஸ்காரர் போலீஸ் வேலையை பார்க்காமல், தனியாக சொந்த தொழிலை கவனித்து வருகிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தென் மாவட்டங்களில் காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பணியில் இருக்கும் போதே, தங்கள் சொந்த தொழில்களையும் கவனித்துக்கொள்ள சென்று விடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் முதல் நிலை காவலராக, பிற்பகுதியில் பாண்டியன் பெயர் கொண்ட ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர், மதுரையில் உள்ள என்.ஏ.எஸ். கேட்டரிங் அன்ட் ஓட்டல் மேனெஜ்மெண்ட் எனும் தனியார் கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்தின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இவர் வாரத்தில் 4 நாட்கள் பணியில் இருக்கும் போதே மதுரைக்கு வந்து கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு வரும் நபர்களுக்கு பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் காவல் நிலையத்தில் இவர் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் அப்படியே கிடக்கிறது. இதனால் மற்ற வேலைகள் எதுவும் செய்ய முடியாமல் காலதாமதம் ஆகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. அதையும் மீறி விசாரித்தால் என் செல்வாக்கு என்னவென்று தெரியாமல் விளையாடுகிறீர்கள், என்னிடமே விசாரிக்கிறீர்களா? எனக்கு பெரிய அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளது. அவர்களுக்கு ஒரு போன் செய்தால் போதும் என்னிடம் விசாரணை நடத்தும் எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி கண்டிப்பாக டிரான்ஸ்பர் தான் என்று கூறி மிரட்டுகிறாராம்.
மேலும் ஒரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிட்டு என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன். நான் எது சொன்னாலும் தட்டவே மாட்டார் என்று கூறி தன்னுடன் வேலை செய்யும் காவலர்களை மிரட்டி வருகிறார். இதற்கிடையில் இவர் நீதிபதியின் வீட்டில் வேலை செய்வதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி மதுரைக்கே டிரான்ஸ்பரில் வந்துள்ளார். அவ்வாறு மதுரைக்கு வந்த அவர் மேலும் பல நீச்சல் குளங்களை கையகப்படுத்தியுள்ளார். இவருக்கு லோக்கல் விஐபியின் ஆதரவு இருப்பதால் நாளுக்கு நாள் இவருடைய அலப்பறைகள் தாங்க முடியவில்லையாம்.. அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு, தனியார் நீச்சல் குள பயிற்சியாளராக பணிபுரிவது சட்டப்படி குற்றம் ஆகும். இதுதெரிந்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே என்று நேர்மையான காவலர்கள் புலம்புகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post போலீஸ் வேலையை கவனிக்காமல் சொந்த தொழில் செய்யும் ‘விஐபி காவலரை’ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article