போலிப் பெண்ணியத்தால் நசுக்கப்படுகிறதா உண்மையான பெண்களின் குரல்கள்?!

1 month ago 8

இன்றைய பெண்கள் குறிப்பாக இன்றைய 18 முதல் 28 வயதான பெண்கள் பெண் சுதந்திரம் என்பதையே தவறாக பயன்படுத்துகிறார்களா? என்னும் கேள்வி எழுகிறது. அதாவது பெண் சுதந்திரம், பெண்ணியம் இவை யாவும் கொண்டாடப்படும் நோக்கமே ஆணுக்கு நிகர் பெண், ஆண்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம், மற்றும் உரிமைகள் பெண்ணுக்கும் இருக்கிறது என்பதை உலகம் முழுக்கப் பரைசாற்றத்தான். ஆனால் இன்றைய இளம் பெண்களிடம் பெண்ணியம் சார்ந்த மனநிலை மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி, வேலை, வேலையில் சம்பளம், விடுமுறையில் சலுகைகள், வரதட்சணை எதிர்ப்பு என எத்தனையோ அடிப்படை உரிமைகளுக்காக போராடி, இன்றளவும் போராடிக்கொண்டு இன்று நாம் கிடைத்திருக்கும் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் உயிர் சேதம், போராட்டம், சிந்திய இரத்தம் பற்றி யாருமே யோசிப்பதில்லை. ஏன் கேரளா மாநிலத்தில் கீழ்சாதிப் பெண்கள் மேலாடை அணிய மார்பு வரிகள் வாங்கப்பட்ட அதர்மத்தைக் களையெடுக்கக் கூட நங்கேலி என்னும் ஒரு பெண் தன் மார்பகங்களையே தியாகம் செய்து உயிரைக் கொடுத்தாள். ஆனால் அதன் நோக்கமும், வலியும் இக்காலப் பெண்களுக்குப் புரியாத காரணத்தால்தான் கிடைத்த சுதந்திரத்தை ஆபாச உடைகளில் வீணாக்குகிறார்களா என எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் எது பெண் சுதந்திரம். மனநல ரீதியாக இதனை அடுத்து வரும் தலைமுறைப் பெண்களுக்கு போதிப்பது எப்படி? சொல்கிறார் எஸ். வந்தனா. (Clinical Psychologist, Counselling Psychologist) ‘இன்று எதைச் சொன்னாலும் பூமர் என்கிற பட்டம் மட்டுமே மிஞ்சுகிறது. அதற்கு இனி சரியான பதில் இளம் வயது பூமராக இருப்பதை விட பூமராக இருப்பது மேல்’ (Being a Boomer is better than Early age Boomer) என்பதை அழுத்தமாகவே சொல்லுங்கள்‘ என்கிறார் டாக்டர் வந்தனா. ஆண் – பெண் சமநிலையை சமூகத்தில் ஏற்படுத்த மனித மனநிலை, மூடநம்பிக்கைகள் மற்றும் சமூக அபிமானங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். இதை செயல்படுத்துவதற்கான சில மனோவியல் முறைகள்:

1. பார்வை மாற்றம்

*பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து சமூகத்தைக் காண ஊக்குவிப்பது பொது மூடநம்பிக்கைகளை முறியடிக்க உதவும்.
*தனிப்பட்ட கதைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து பெண்களுக்கான சமத்துவத்தில் உணர்வுகள் சார்ந்த மாற்றங்களை உண்டாக்குவது

2. மனநிலை முரண்பாடுகளை (Cognitive Dissonance) குறைப்பது

*பலர் பெண்களுக்கான சமத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பழக்கப்பட்ட நம்பிக்கைகளால் அதில் இருக்கும் மூடநம்பிக்கைகளைக் களையலாம்.
* “பெண்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது” என்பதை விளக்க, நேரடியாக “இது ஒரு பெண்களுக்கான சமத்துவ பிரச்னை” என்று கூறாமல் இது குடும்பத்தின் வளர்ச்சி சார்ந்த பொதுப் பிரச்னையாக அடையாளப்படுத்தலாம்.

3. சமூக ஆதாரம்& முன்னோடிகள்

*பெண்களுக்கான சமத்துவத்துக்கு துணைபுரிந்தவர்களின் கதைகளை பேசுவது, அதை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கும்.
* ஒரே சமயத்தில் உண்மைகள் மூலம் பலர் சமத்துவத்தை ஆதரிப்பதைப் பார்த்தால், மற்றவர்களும் அதே கருத்தை பின்பற்றும் சாத்தியக்கூறு அதிகரிக்கும்.

4. கருத்தாக்கம் & கதையாக்கம் (Framing & Narrative Shaping)

*பெண்களுக்கான சமத்துவத்தை “ஆண்களுக்கு எதிரான போராட்டம்” என அடையாளப்படுத்தாமல் “உலகளாவிய மனித உரிமை பிரச்சனை” என முன்னிலைப்படுத்தினால் ஆண்கள் மத்தியிலும் இது ஏற்றுக்கொள்ளப்படும்.
* எதிர்ப்பை ஏற்படுத்தாத நடுநிலையான உரையாடல் செய்வது அவசியம்.

5. மறைமுகப் பாரபட்சம்(Implicit Bias) எதிர்த்துக் குரல்

*அறிவுசார் பயிற்சி மற்றும் சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளின் மூலம் பழக்கப்பட்ட பாலின பாரபட்சங்களை அடையாளம் காணலாம். .
*பெண்கள் மட்டும் பாதிக்கப் படுவதில்லை, ஆண்களும் இந்த சமூகக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் விவாதிக்கச் செய்தல் ஆரோக்கியமான மனிதத்திற்கு வழி வகுக்கும்.

6. குழு ஒத்துழைப்பு & சமூகஒத்துழைப்பு (In-Group Influence & Community Engagement)

*ஒருவரின் சமூகக் குழுவில் இருக்கும் நபர்கள் சமத்துவத்துக்கு ஆதரவாக இருப்பதைப் பார்க்கும்போது, அவரும் அதனை ஏற்க சாத்தியக்கூறு அதிகரிக்கும்.
*ஆண்களை பெண்களுக்கான சமத்துவத்தின் கூட்டாளிகளாக இணைப்பதால் இதை பெண்களுக்கான பிரச்னை என்ற கோணத்தில் ஒதுக்கும் மனப்பான்மையை தவிர்க்க உதவும்.

7. வெளிப்படையான உரையாடல்கள்(Psychological Safety & Open Conversations)

*எந்த விதமான பயம் இல்லாமல், மக்கள் சந்தேகங்களை எழுப்பவும், கேள்விகள் கேட்கவும், பழக்கப்பட்ட பாரபட்சங்களை முறியடிக்கவும் ஒரு பாதுகாப்பான உரையாடல் சூழலை உருவாக்கலாம்.
*பெண்களுக்கான சமத்துவம் என்பது ஒரு பாலினத்திற்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சம உரிமை வழங்குவதற்கான முயற்சி என்பதை வலியுறுத்துவது அவசியம்.

இக்காலப் பெண்களிடம் ஒரு அடக்கு முறையும், சமநிலைக்கான குரல் போய் ஆதிக்கக் குரல் மேலோங்கி இருப்பதனை எப்படிக் களைய முடியும்? தொடர்ந்தார் டாக்டர் வந்தனா. பேசுவதுதான் ஒரே வழி. ‘ நீ அந்தக் காலத்திலே அப்படி இருந்தா நாங்களும் அப்படி இருக்கணுமா?.‘ . பொதுவாகவே இந்தக் கேள்வியை நிறைய இளம்பெண்கள் அவர்களின் அம்மா, பாட்டியிடம் கேட்பதைப் பார்க்க முடிகிறது. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லும் பாதுகாப்பு சார்ந்த அறிவுரைகளைக் கூட பெண் சுதந்திரப் போர்வை போர்த்தி ‘என் உரிமை’ என அடம்பிடிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. வரதட்சணையே வேண்டாம் என போராடிச் சட்டம் இயற்றிய நிலையில் இன்று ‘Dad’s Lil Princess’ என்கிற பெயரில் ஒரு இளவரசி போல் நகை, பணம் எனக் கேட்டுத் தன் தந்தையை கடன்பட வைக்கக் கூட தயங்காத நிலை உண்டாகியிருக்கிறது. அதாவது அவர்கள் அப்பா வீட்டில் இருந்து கொண்டு செல்லும் பொருள், பணத்தைத் தங்களது அடையாளமாகவும், அங்கீகாரமாகவும் கொண்டு மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தாரை பயமுறுத்துவது, மற்றும் அதிகாரம் காட்ட நினைப்பது.

இன்னொரு புறம் பெண்ணியம், பெண் சுதந்திரம் என இதனை ஆயுதமாகக் கொண்டு மது, புகை, ஓரினச்சேர்க்கை போன்ற பழக்கங்களுக்கும், கருவியாக மாற்றி கருணை தேடுவது, அல்லது ஆதரவு கேட்பது. ஓரினச் சேர்க்கையும், பெண் சுதந்திரமும் ஒன்றல்ல. ஏனெனில் ஓரினச் சேர்க்கை பிரச்னை என்பது ஆண் – பெண் இருவருடைய பிரச்னை என்பது புரியாத சூழல் தான் இந்த பெண் சுதந்திர பெட்டிக்குள் தங்களுக்கு சந்தோஷம் அல்லது உற்சாகம் தரும் எண்ணங்களை மட்டும் புகுத்தி அங்கே மட்டும் செயல்படுவது. போலியான பெண் போராளிகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங் களில் மட்டும் குரல் கொடுத்துவிட்டு மீதி நேரம் அமைதியாக இருப்பர். அலுவலகத்தில் பெண் பணியாளர் மீதான அத்து மீறல், சம்பள உரிமை, கல்வி மறுப்பு, பெண் குழந்தைகளுக்கு வயது வந்த ஆணுடன் திருமணம் இங்கே எல்லாம் இவர்கள் குரல் கேட்காது. இன்று இந்திய சட்டங்களின் கீழ் பதிவாகும் வழக்குகளில் 2 – 8 % போலியாக பெண்கள் தங்களுக்கான சட்டத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவரை பழி வாங்கப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது இந்திய குடும்ப நலச் சட்டம். பெண் சுதந்திரத்தின் நோக்கம் மனிதம். சம உரிமை. இதைப் புரிந்துகொண்டாலே ஆண் – பெண் இருவருமே சமநிலை பேசத் துவங்குவோம்‘

– ஷாலினி நியூட்டன்.

The post போலிப் பெண்ணியத்தால் நசுக்கப்படுகிறதா உண்மையான பெண்களின் குரல்கள்?! appeared first on Dinakaran.

Read Entire Article