
சிட்னி,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு அறிவித்தது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.
முன்னதாக மே 8-ம் தேதி தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. அன்றைய தினம் இரவில் பாகிஸ்தான், இந்திய எல்லையை குறி வைத்து விமானம் மற்றும் டிரோன்கள் மூலம் இடைவிடாமல் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதும் எல்லைப்பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் துண்டிக்கப்பட்டதும் தெரிய வந்தது. அதன் ஒரு பகுதியாகவே தர்மசாலா மைதானத்திலும் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
இறுதியில் இந்த ஆட்டம் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப கோளாறு காரணமாக கைவிடப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள், நடுவர்கள், ஒளிபரப்பு குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், நடுவர்களை சிறப்பு ரெயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. அதன்படி அனைவரும் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பரபரப்பு சம்பவத்தின்போது தாங்கள் அடைந்த திகில் அனுபவத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியான அலீசா ஹீலி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அது அசாதாரண அனுபவமாக இருந்தது. திடீரென மைதானத்தில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. நாங்கள் அனைவரும் மேலே அமர்ந்துகொண்டு என்ன நடக்கிறது என பாத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு பெரிய குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக இருந்தோம். எங்களுடன் அணியின் உதவியாளர்களும் இருந்தனர்.
அப்போது எங்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்ற நபர் வேகமாக வந்தார். அவர் பேருந்தில் எங்களை வேகமாக ஏறுமாறு கூறினார். அவரது முகம் வெளிறிப் போய் இருந்தது. 'இப்போதே நாம் சென்றாக வேண்டும்' என்றார். அப்போது இன்னொரு நபரும் பரபரப்பாக வந்தார். அவர் எங்கள் குழுவில் இருந்த ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டார். 'நாம் இப்போதே இந்த மைதானத்தை விட்டுச் செல்ல வேண்டும்' என்றார்.
'என்ன நடக்கிறது?' என்று நாங்கள் நினைத்தோம். எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அனைவரும் ஒரே அறையில் ஒன்று திரட்டப்பட்டோம். அங்கு இடமே இல்லை. மிகுந்த நெருக்கடியுடன் நாங்கள் அங்கு நின்றோம். அப்போது இரு அணி வீரர்களும் அங்கே வந்தனர். பாப் டு பிளெஸ்சிஸ் ஷூ கூட அணியவில்லை. நாங்கள் அனைவரும் அழுத்தத்துடன் இருந்தோம்.
நான் மிட்செல் ஸ்டார்க்கிடம் என்ன நடக்கிறது? என்று கேட்டேன். அவர், '60 கிலோமீட்டர் தூரத்தில் சில ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அந்த இடம் முழுவதும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன' என்றார். அதனால்தான் தர்மசாலாவிலும் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன என்று அவர் கூறினார். உடனடியாக நாங்கள் பரபரப்படைந்து வேன்களில் ஏறினோம். எங்கள் ஓட்டல் அறைக்குச் சென்றோம். அது பைத்தியக்காரத்தனமாக இருந்தது.
அதன் பிறகு டெல்லிக்குச் செல்லும்போது நாங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் சென்றோம். அது எங்களுக்குப் பயத்தை அளிப்பதாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் நான் 'கால் ஆப் டியூட்டி'( வீடியோ கேம்) விளையாட்டை விளையாடி இருக்கிறோம். எனவே, நாங்கள் ரேடார் மூலம் ஏவுகணைகள் வீசப்படுவதை காட்டும் சில இணையதளங்களை பார்த்தோம். அப்போது ஒரு கிராமத்தில் ஏதோ வெடித்ததைப் பார்த்து நாங்கள் பயந்து போனோம்.
நாங்கள் அனைவரும் அப்போது மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். திடீரென சிலர் 'அங்கே பாருங்கள்!' என்றார்கள். நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். வானத்தில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்தன. அது ஒரு திருமணமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு நல்ல திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இது சரியான நேரமாக அமையவில்லை. அப்போது நாங்கள் அடைந்த அதிர்ச்சி மற்றும் பதற்றம் மிகவும் மோசமாக இருந்தது. நல்ல வேளையாக நாம் தாக்குதலின் குறியாக இல்லை என்று மட்டும் நான் நினைத்துக்கொண்டேன்" என கூறினார்.