
ரோம்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பிரார்த்தனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.
இருப்பினும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இந்த நிலையில், ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.