*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே, ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் பல்வேறு பன்னாட்டு கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அதிக தொழிலாளர்கள் பணியாற்றி வரும் ஓலா கம்பெனி மற்றும் ஷூ கம்பெனிகள் இயங்கி வருகிறது.
இந்நிறுவனங்களை மையப்படுத்தி போச்சம்பள்ளி முதல் சிப்காட் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்று மூன்று மாத காலமாகியும் சாலை நடுவே வெள்ளை கோடுகள் மற்றும் தெர்மா பிளாஸ்ட் பதியாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் எந்த சாலையில் செல்வது என்று தெரியாமல் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று போச்சம்பள்ளியில் இருந்து சிப்காட் நோக்கி சென்ற கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனவே, சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் சரவணனிடம் கேட்டபோது, ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் தற்போது வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
The post போச்சம்பள்ளி- ஓலைப்பட்டி சாலையில் விபத்து அபாயம் அதிகரிப்பால் அவதி appeared first on Dinakaran.