பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் மட்டுமின்றி, அரசு பள்ளிகளிலும் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். இதையடுத்து, மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்போம்.
குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை அண்ணா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மேலும், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் அது குறித்த துண்டு பிரசுரமும் அளிக்கப்பட்டது.
The post பொள்ளாச்சி, ஆனைமலை பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.