விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் கொள்ளை வழக்கில் கூடுதலாக 20 பக்க குற்றப்பத்திரிகை இன்று (ஜூன் 4) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி இயங்கியது. இக்குவாரியில் திமுக ஆட்சியில் (2006-11), விதிகளை மீறி 2 லட்சத்துக்கு 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் கொள்ளை போனது. இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்துக்கு 40 ஆயிரத்து 600 ரூபாயை இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகனான முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி மற்றும் ஆதரவாளர்கள் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்கு பதிவு செய்தனர்.