திருத்தணி, ஜன.23: பொதட்டூர்பேட்டை அருகே தனியார் பள்ளி பேருந்து குப்புற கவிழ்ந்த விபத்தில் 10 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். பொதட்டூர்பேட்டை-திருத்தணி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி பேருந்து சி.என்.கண்டிகை கிராமத்திலிருந்து 10 மாணவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பேட்டை கண்டிகை பகுதியில் பேருந்து சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து, சாலையோரத்தில் இருந்த விளை நிலத்திற்குள் பாய்ந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமா நாயுடு கண்டிகையைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் ரியான் (8), பேருந்து ஓட்டுனர் சுரேஷ் மற்றும் மாணவர்கள் லேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் கிராம மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், மிதமான வேகத்தில் பேருந்து சென்றதால் பள்ளி மாணவர்கள் உயிர் தப்பியதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பொதட்டூர்பேட்டை அருகே தனியார் பள்ளி பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்து: 10 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.