பொங்கல் விடுமுறை 4 நாட்களில் அரசு பஸ்சில் 8.15 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

5 months ago 16

மதுரை: சென்னையில் இருந்து இந்த ஆண்டு பொங்கலுக்காக 4 நாட்களில் மட்டும் அரசு பஸ்களில் 8 லட்சத்து 15,000 பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த ஆண்டு முன்பதிவு செய்து பொங்கல் விடுமுறைக்காக பயணம் செய்தவர்கள் 3 லட்சம் பேர் தான். இந்தாண்டு ஒரு வழியில் முன்பதிவு செய்து சென்றவர்களின் எண்ணிக்கை 3.20 லட்சத்தை எட்டியுள்ளது. மீண்டும் திரும்புவோரின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 5 லட்சத்திற்கும் அதிகம் பேர் பயணிக்கின்றனர். மக்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர். கடந்தாண்டு சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்தாண்டு 4 நாட்களில் மட்டும் 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களை விட அரசு பஸ்களை நம்பி மக்கள் அதிகம் வருகிறார்கள் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதேபோல் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அனைத்து வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பொங்கல் விடுமுறை 4 நாட்களில் அரசு பஸ்சில் 8.15 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article