
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் ஸ்டீபன் (வயது46). இவர் பெயிண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிந்து (37). இவர்களுக்கு 12, 7 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, களியக்காவிளையில் உள்ள பிந்துவின் உறவினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பார்ப்பதற்காக நேற்று பிந்துவும் அவரது கணவர் ஜோஸ் ஸ்டீபனும் பைக்கில் களியக்காவிளைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். பைக்கை ஜோஸ் ஸ்டீபன் ஓட்டி செல்ல பிந்து பின்னால் அமர்ந்திருந்தார்.
தக்கலை அருகே மணலி பகுதியில் வந்த போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து ஸ்டீபனும், பிந்துவும் கீழே விழுந்தனர். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சின் பின் சக்கரம் பிந்து மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயம் அடைந்த பிந்துவை அவரது கணவரும், அருகில் நின்றவர்களும் மீட்டு தக்கலை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிந்துவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்தில் ஜோஸ் ஸ்டீபன் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் எதிரே மனைவி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.