
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா ஹொம்பேகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்(வயது 32). இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரவீன் தேவனஹள்ளி விமான நிலையத்தின் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரவீன் தனது மனைவியை பிரிந்தார். பின்னர் சிக்பள்ளாப்பூர் டவுன் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் வேலைக்கு சென்று வரும்போது கவுரிபிதனூர் தாலுகா இ-பாளையா கிராமத்தை சேர்ந்த சீனிவாஷ் என்பவருடைய மனைவி நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் நெருங்கி பழகினர். செல்போன் எண்களையும் பரிமாறி அடிக்கடி பேசி வந்தனர். இது அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நந்தினியின் கணவர் சீனிவாசுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தார்.
இதையடுத்து நந்தினி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறிவிட்டு தன்னுடைய கள்ளக்காதலன் பிரவீனுடன் சென்றுவிட்டார். அதையடுத்து கடந்த 6 மாதங்களாக பிரவீனும், நந்தினியும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நந்தினியை சந்தித்த அவரது கணவர் சீனிவாஸ் தன்னுடன் வந்துவிடும்படி கூறி அழைத்து வந்தார். மேலும் சமாதானமும் பேசி வந்தார்.
இந்த நிலையில் தனது மனைவி அவரது கள்ளக்காதலன் பிரவீனுடன் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரும்படியும் கோரி மஞ்சேனஹள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நந்தினியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அறிவுரை கூறினர். அதன்பேரில் நந்தினி மனம் மாறி கணவர் சீனிவாசுடன் சென்றுவிட்டார். இதனால் பிரவீன் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தார்.
மேலும் வாழ்க்கையில் நொந்துபோன பிரவீன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.