
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மேட்டு தெரு தாமஸ் நகரைச் சேர்ந்த சண்முகையா மகன் மாரீஸ்வரன் (வயது 43). டிரைவரான இவருக்கு மது பழக்கம் உள்ளது. இதனால் மாரீஸ்வரனுக்கும் அவரது மனைவி பவுன்இசக்கிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று பவுன்இசக்கி தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த மாரீஸ்வரன், பவுன்இசக்கியை அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கியுள்ளார். அவரது உறவினர்கள் மாரீஸ்வரனை கண்டித்ததும் அவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த பவுன்இசக்கி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரீஸ்வரனை கைது செய்தனர்.