
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நடிகர் சங்க கட்டிடம்தான் என் கனவு. அதனால்தான் கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே எனக்கு திருமணம் என்று அறிவித்தேன். வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். நான் வெறும் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகள் தாண்டிவிட்டது.
நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையும் நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 15-ந்தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டம் வகுத்துள்ளோம். அநேகமாக ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் எனக்கு திருமணம் உறுதி. என் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ந்தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம்தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இது விஷால் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.