பெங்களூருவில் 62 அடி உயர சிலை நிறுவிய நிலையில் சென்னையில் 2 அனுமன் சிலைக்காக செல்லும் 300 டன் ராட்சத பாறைகள்

5 hours ago 4

*வந்தவாசி அருகே மக்கள் திடீர் எதிர்ப்பு

வந்தவாசி : சென்னையில் 2 அனுமன் சிலைகள் நிறுவ வந்தவாசி அருகே 300 டன் ராட்சத பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டது. இதனை கொண்டு செல்ல மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு குன்றில் பிரம்மாண்ட பாறைகள் உள்ளன.

இவை சிலை செய்ய தரமாக இருப்பதால் பெங்களூரு ஈஜிபுரம் பகுதியில் சுமார் 62 அடி உயரத்தில் கோதண்டராம பெருமாள் சிலை மற்றும் 20 அடி உயரம் கொண்ட நாகபாஷம் மற்றும் 20 அடி உயரம் கொண்ட பீடம் ஆகியவற்றை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனரக வாகனம் மூலம் 470 டன் எடைகொண்ட பாறை கொண்டு செல்லப்பட்டது. சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பெங்களூருவை சென்றடைந்த அந்த பாறை மூலம் கோதண்டராம பெருமாள் சிலை நிறுவப்பட்டது. அண்மையில் அந்த சிலைக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த சிலை அமைப்பதற்கு வெட்டி எடுக்கப்பட்ட பகுதியின் கீழ், மற்றொரு தரமான பாறை இருந்தது. இதனை பயன்படுத்தி சென்னை தி.நகரில் உள்ள அயோத்தியா வேதபாடசாலையில் சுமார் 36 அடி உயரத்தில் 2 அனுமன் சிலைகளை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்கான பாறை வெட்டி எடுக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்துவந்தது.

36 அடி உயரத்தில் 9 அடி அகலத்தில் 150 டன் எடை கொண்ட 2 பாறைகளாக வெட்டி எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒரு பாறையை கனரக வாகனம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பழவேரி பகுதியில் சிற்ப கலைஞர் குழுவிடம் ஒப்படைத்து அதன்பின்னர் சென்னை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 146 டயர்கள் கொண்ட ராட்சத லாரி கொண்டுவரப்பட்டது. இந்த லாரியில் 2 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு எடுத்த செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், `ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு 470 டன் எடைகொண்ட பெரிய பாறையை வெட்டி எடுத்துச்சென்ற பெங்களூரு பகுதியில் சிலை நிறுவியுள்ளனர். முன்னதாக பாறை வெட்டி எடுத்த இடத்தில் கோயில் கட்டி தருவதாக உறுதியளித்ததோடு நின்றுவிட்டது.

கனிமவளத்துறை நிதி மூலமாக ரூ.9 லட்சம் செலவில் கோயில் கட்டித்தரப்பட்டது. ஆனால் போதிய நிதி இல்லாததால் கருவறை, மண்டபம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட எந்த பணிகளும் முழுமையடையவில்லை. ஆனால் தற்போது சென்னையில் நிறுவுவதற்காக 2 பாறைகளை வெட்டி வைத்துள்ளீர்கள்.

எங்கள் கோயில் திருப்பணிக்கு நிதி கிடைத்தால் மட்டுமே நாங்கள் பாறைகளை கொண்டு செல்ல அனுமதிப்போம், என்றனர். இதனால் பாறைகளை கொண்டு செல்லும் பணி நேற்று தடைபட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post பெங்களூருவில் 62 அடி உயர சிலை நிறுவிய நிலையில் சென்னையில் 2 அனுமன் சிலைக்காக செல்லும் 300 டன் ராட்சத பாறைகள் appeared first on Dinakaran.

Read Entire Article