
பெங்களூரு,
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந் தேதி ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்த், கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த விகாஸ்குமார், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சேகர் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்திருந்தது.
இதுபற்றி மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடை நீக்கம் குறித்து மாநில அரசால், மத்திய அரசுக்கு 15 நாட்களில் முறைப்படி அறிக்கை வழங்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு சார்பில் அந்த அறிக்கை வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் குறித்த அறிக்கை விரிவாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய அரசிடம், கர்நாடகம் சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையை மத்திய அரசு பரிசீலனை நடத்தி பணியிடை நீக்கத்தை ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா? என்பது குறித்து முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.