
முல்லான்பூர்,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினர். நடப்பு சீசனில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி இம்முறை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. யாஷ் தயாள் பந்துவீச்சில் பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் நடையை கட்டினார். சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரப்சிம்ரன்சிங் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை 2 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் அவுட்டானார். நடப்பு சீசனில் பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி இந்த முறை பெங்களூரு பந்துவீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சு கூட்டணி இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது.
அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 4 ரன்களிலும், நேஹல் வதேரா 8, ஷசாங்க் சிங் 3 ரன்களிலும், முஷீர் கான் டக் அவுட் ஆகியும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். சிறிது நேரம் நிலைத்து விளையாடி அணிக்கு நம்பிக்கை அளித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 ரன்களில் சுயாஷ் சர்மாவின் சுழலில் போல்டானார். இறுதி கட்டத்தில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஒரளவு சமாளித்து (18 ரன்கள்) பஞ்சாப் அணி 100 ரன்களை எட்ட உதவினார்.
14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் அணி 101 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய பெங்களூரு தரப்பில் சுயாஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாஸ் 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.