![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/03/37282484-5.webp)
சென்னை,
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
இவரது இசையில் சமீபத்தில் வெளியான 'விடுதலை 2' படத்தில் இடம்பெற்ற 'தினம் தினமும்', 'மனசுல' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அண்மையில் திருநெல்வேலியில் இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா. இது வரவேற்பை பெற்ற நிலையில், மற்ற ஊர்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையில் நேற்று சென்னையில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு வந்த ரஷிய நாட்டு நடனக் கலைஞர்கள் அவரது இசையமைப்பில் சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற 'பூவே செம்பூவே' மற்றும் மீரா படத்தில் இடம்பெற்ற 'ஓ பட்டர்ப்ளை' ஆகிய பாடல்களுக்கு கண்கவர் வகையில் நடனமாடினர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த இளையராஜா, "ரஷியாவில் இருந்து வந்து எனது ஸ்டூடியோவில் சிறப்பான நிகழ்ச்சியை நிகழ்த்திய நடனக் கலைஞர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களின் நடனம் மனதை தொடும் வகையில், சிறப்பாக இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.