
ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமான பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.
ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தர்பதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்படும். 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள்.
தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குந்திச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவு பெறும். இந்த விழா 9 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நாளை (27.6.2025) தொடங்குகிறது. இதற்காக தேர்கள் உருவாக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரில் முதல் முறையாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு சவாலை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் முதல் முறையாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தபடி கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளனர். கடற்கரை பகுதிகளில் மாநில கடலோர காவல் படை, கடற்படை குழுக்களுடன் முழு அளவில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி நடைபெறும்.
பூரி நகரம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ரத யாத்திரை நடைபெறும்.