பூதப்பாண்டி, ஜன. 17: பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பைக்கில் சென்ற நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பூதப்பாண்டியை அடுத்துள்ள எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (48). மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு ஆண்பிள்ளைகளும் உள்ளனர். ராஜன் நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் தனது பைக்கில் அழகியபாண்டியபுரத்தில் இருந்து தடிக்காரன்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பைக்கில் அவருடன் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அழகிய பாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் கேசவன் புதூரை அடுத்த போத்தியூர் பகுதியில் செல்லும் போது சாலை ஓரமாக நின்ற மின் கம்பத்தில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மூன்று பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
The post பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி பலி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.