புழல் அருகே பரபரப்பு: மீட்டர் பாக்ஸ் தீப்பிடித்ததில் பைக் எரிந்து சேதம்

9 months ago 47

புழல்: புழல் அருகே மின்மீட்டர் பாக்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது.புழல் அருகே காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். ஆட்டோ டிரைவர். இவர் நேற்றிரவு தனது குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். வீட்டுக்கு வெளியே அவரது பைக் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை கண்ணனின் வீட்டுக்கு முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மீட்டர் பாக்ஸ் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. பின்னர் தீ மளமளவென பரவி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கண்ணனின் பைக்கிலும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

சிறிது நேரத்தில் வீட்டுக்குள் தீ பரவியது. திடீரென கண்விழித்து பார்த்த கண்ணன் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. தகவலறிந்து செங்குன்றம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் போராடி, பைக் மற்றும் மின்மீட்டரில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் கண்ணனின் பைக், மின்மீட்டர் மற்றும் மின்வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post புழல் அருகே பரபரப்பு: மீட்டர் பாக்ஸ் தீப்பிடித்ததில் பைக் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article