பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரே இந்திய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியிலும் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக அவரே இருந்தார். முதல் இன்னிங்சில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதே சமயம் அவர் அதிக ஓவர்களையும் வீசினார். சமீபத்தில் தான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். எனவே அவரால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என முன்பே அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என பிசிசிஐயும் முன்பே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் அவர் அதிக ஓவர்களை வீசினார். முதல் இன்னிங்சில் 24.4 ஓவர்களையும், 2வது இன்னிங்சில் 19 ஓவர்களையும் வீசினார். 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம்தேதி தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 10ம்தேதி 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. 2வது, 3வது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையேயான இடைவெளி மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடுவது அவருக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் 2வது போட்டியின் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. பும்ரா 3வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
பும்ராவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. அவர் இப்போதுதான் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வாகி இருக்கிறார். அவர் 2வது போட்டியில் விளையாடினால் அதுவே அவரது சர்வதேச டெஸ்ட் அறிமுகமாக இருக்கும். டி20 வடிவத்தில் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் முதன்மை பந்துவீச்சாளராக இருக்கிறார். அதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்குக் கைகொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
The post பும்ராவுக்கு ஓய்வு; 2வது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகிறார் appeared first on Dinakaran.