புதுமாப்பிள்ளை உட்பட 5 பேர் மீது வழக்கு செய்யாறு அருகே சிறுமிக்கு திருமணம்

6 months ago 17

செய்யாறு, நவ. 12: செய்யாறு அருகே 15 வயதான காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு வரை படித்து பாதியிலே நின்று விட்டார். இச்சிறுயின் தந்தை இறந்து விட்டதால் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி கிராமத்தில் உள்ள பெயின்டர் ஒருவருக்கு கடந்த 8ம் தேதி அதே கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு தொலைபேசி மூலம் நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் ஊர் நல அலுவலர் மகேஸ்வரி நேற்று தூசியில் திருமணம் நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டார். அதில், சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து குழந்தை திருமணம் சட்டப்படி தவறு என்பதை குடும்பத்தாரிடம் எடுத்துக் கூறி எச்சரித்தார். மேலும் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் என 5 பேர் மீது மகளிர் ஊர் நல அலுவலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post புதுமாப்பிள்ளை உட்பட 5 பேர் மீது வழக்கு செய்யாறு அருகே சிறுமிக்கு திருமணம் appeared first on Dinakaran.

Read Entire Article