
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த 2005-ம் ஆண்டு ஐ.ஆர்.பி.என். பிரிவு உருவாக்கப்பட்டது. இதில், 800-க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.பி.என். போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, ஐ.ஆர்.பி.என். போலீசார் போதிய உடற்பயிற்சி இல்லாததால், பலர் உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் முன்னாள் முதல்-அமைச்சர், எஸ்.பி., உதவி கமாண்டன்ட் உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வரும் ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு கட்டாய உடற்பயிற்சி அளிக்க டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவிட்டார். முதற்கட்டமாக காவல்துறை உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் 70 ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு கட்டாய நடைபயிற்சி நடந்தது.
இதன்படி ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் திரண்ட ஐ.ஆர்.பி.என். போலீசார் வம்பாக்கீரப்பாளையம், வாணரப்பேட்டை மற்றும் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.