புதுக்கோட்டை: புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கோட்டைபட்டினம், ஜெகதா பட்டினம் ஆகிய இரு பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட விசை படகுகளும், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் உள்ளனர். இந்நிலையில் மீன்பிடித்தடைக்காலம் முடிந்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க நேற்று அதிகாலை சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சசி, சேது, முனிராஜ், மகேந்திரன் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர்.
அவர்களது ரோந்து படகை வைத்து மீனவர்களின் விசை படகு மீது மோதி சேதப்படுத்தினர். அதன் பின்பு அந்த விசைப்படகை இலங்கை கடற்பகுதிக்குட்பட்ட எல்லை பகுதிக்கு இழுத்து சென்று மீனவர்களை தாக்கியதோடு மீன்பிடி உபகரணங்களான வலை உள்ளிட்டவற்றை கடலில் வீசி படகையும் சேதப்படுத்தி விரட்டி அடித்தனர். இதில் உயிர்பிழைத்த மீனவர்கள் ஊர்திரும்பிய நிலையில் வாழ்வாதாரம் கருதி மீன்பிடிக்க செல்கிறோம். மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கோம். ஒவ்வொரு முறையும் கடலுக்கு சென்றுவிட்டு திரும்பி வருவது பெரும் பாடாக உள்ளது. இத்தகை சம்பவத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்து வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் கூறினர். ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கள் படகுகளை சேதப்படுத்தி உள்ளனர். ஒன்றிய அரசு தலையிட்டு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வு ஏற்படுத்தி தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய சம்பவம் ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களிடையே கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
The post புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..!! appeared first on Dinakaran.