புதுக்கோட்டையில் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பற்றிய பயிற்சி

7 months ago 38

புதுக்கோட்டை, நவ.13: விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பற்றிய பயிற்சி முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர். எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துதல் பற்றிய பங்காளர்களுக்கான பயிற்சி புதுக்கோட்டையில் கூட்ட அறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி. ராஜ்குமார் தலைமை வகித்தார். புதுக்கோட்டை நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர். தீபக் குமார் பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விவசாயிகளுக்கு தேவையான சரியான தகவல்களை வழங்குவது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ஆனால் விவசாயத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்துகின்ற வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் பெறப்படும் தகவல்கள் அமைய வேண்டும். விவசாயத்தில் பல்வேறு நில அமைப்புகள், இடத்திற்கு இடம் வேறுபட்ட பிரச்சனைகள் உள்ளது. இது போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் இவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள், விவசாயிகள், பயிர் மருத்துவர்கள் உள்ளடக்கிய இந்த கலந்துரையாடல் பயிற்சி அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் பயனுள்ள விவரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் வழங்க உதவியாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் முகமது ரபி, திருச்சி கிரியா நிறுவன அலுவலர் சிவபாலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பயிற்சியில் வேளாண்மை துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், உழவர் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள், விவசாயிகள், இடுப்பொருட்கள் விற்பனையாளர்கள், விவசாய கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பற்றிய பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article