‘‘மலராத கட்சியின் தற்போதைய தலைவர் ஆன்மிகம் பேசத்தான் லாயக்கு என்பதுபோல மேடையிலேயே முழங்கி மாஜி தலைவர் மவுண்ட் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளாரே தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் அண்மையில் நடந்த விழா ஒன்றில் மலராத கட்சியின் முன்னாள் மவுண்ட் தலைவர் கலந்துகொண்டு நீண்ட உரையை ஆற்றினாராம்.. விழா மேடையில் தற்போதைய மாநில தலைவர் முதலிலேயே பேசிவிட்டு அமர்ந்து இருந்தாராம்..
கடைசியாக மைக் பிடித்த மவுண்ட், ‘தமிழகத்தில் மிக சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர் யார் இருக்கிறார்கள் என்று கேட்டால், நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் ஒரு மாத காலத்தில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு நமது தலைவர் வந்துள்ளார். மதுரை மாநாட்டில் தொடங்கி அவருக்குள் இருந்த ஆன்மிக எழுச்சியை இப்போது மேடைகளில் பார்க்க முடிகிறது’ என்று எடுத்த எடுப்பிலேயே பேச்சை தொடங்கினாராம்.. இதனை கேட்டதும் விழாவில் திரண்டிருந்தவர்கள் கைதட்டி சிரித்தார்களாம்..
இதன் மூலம் மலராத கட்சியின் தற்போதைய தலைவர் ஆன்மிகம் பேசத்தான் லாயக்கு, அவருக்கு அரசியல் வரவில்லை என்று மேடையில் போட்டு உடைத்துவிட்டார் என்கின்றனர் மவுண்ட் ஆதரவாளர்கள்.. ஏற்கனவே மவுண்ட் தனது வார் ரூம் ஆட்களை கொண்டு மற்ற தலைவர்களை தேவைக்கேற்ப வாரிவிடுவது ஒருபுறம் இருக்க, இப்படி நேரடியாக மேடையிலேயே மக்கள் மத்தியில் போட்டுத்தாக்கினால் எப்படி என்று மலராத கட்சியின் தற்போதைய தலைவரின் ஆதரவாளர்கள் கடுகடுக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேசிய தலைமை கூட்டணி ஆட்சி தூபம் போட்டாலும் கூட்டணி உடைந்துபோய்விடக் கூடாது என்பதற்காக மாநில புதிய தலைவர் படாதபாடு படுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத தேசிய கட்சியில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார்களாமே.. அந்த கட்சியில் நம்பர் 2 இடத்தில் இருக்கும் உஷாரானவர் தமிழகம் வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சி தான் என தூபம் போடுகிறாராம்.. அதற்கு எதிராக இலை கட்சியினர் முட்டுக்கொடுத்து வர்றாங்க.. இருந்தாலும் இந்த கூட்டணி உடைந்து போய் விடக்கூடாதே, சிதறி விடக்கூடாதே என மலராத தேசிய கட்சியின் மாநில புதிய தலைவர் படாதபாடுபடுகிறாராம்..
கட்சியின் தலைமையை எதிர்த்தும் குரல் கொடுக்கக்கூடாது. அதேநேரத்தில் உள்ளூர் அரசியலையும் சமாளித்தாக வேண்டும், எங்கே இந்த கூட்டணி உடைந்து போனால் சட்டமன்ற தேர்தலில் காணாமல் போய்விடுவோம், மக்களவை தேர்தல் போன்று சட்டமன்ற தேர்தலிலும் முட்டை தான். மிஞ்சினால் தனது மாநில தலைமை பதவியை நிரூபிக்க முடியாமல் போய்விடும் என்பதால் மிகவும் அடக்கி வாசிக்கிறாராம் அவர்.. என்னதான் உஷாரானவர் கூட்டணி ஆட்சி என்று கூறினாலும் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ அந்த சப்ஜெட்டுக்குள் செல்லாமல் சேலம்காரர் தலைமையில்தான் ஆட்சி என்கிறார்.
தேசிய தலைமை ஒன்று, மாநில தலைமை மற்றொரு வாய்ஸ் என இலைக்கட்சியினரின் நிலைமை நட்டாற்றில் நிற்கிறதாம்.. இதில் யார் சொல்வதை நம்புவது என இலைக்கட்சியினர் குழப்பத்தில் தவிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வட்டார போக்குவரத்து துறையில் புரளும் கணக்கில்லாத பணத்தால் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறையின் பார்வை அந்த பக்கம் விழுந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குறிச்சி மாவட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளதாம் நெடுஞ்சாலை அமைந்துள்ள பேட்டை.
இங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக லஞ்சப் பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்திருக்கு.. இதையடுத்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கி கணக்கில் வராத பல லட்சத்தை பறிமுதல் செய்தாங்களாம்.. 6 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் லஞ்சப்பணம் தாராளமாக கை மாறுவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்காம்.. இதனால் அலுவலகத்திற்கு செல்ல விண்ணப்பதாரர்களே அச்சப்படும் சூழல் நிலவுதாம்..
இதற்கான ஆதாரங்களுடன் புகார்களை வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சேகரித்தபடி உள்ளார்களாம்.. எனவே மீண்டும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் பார்வை அங்கு விழுந்துள்ளதால் எந்த நேரத்திலும் அடுத்த ரெய்டு நடக்க வாய்ப்பு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூத் கமிட்டி கூட அமைக்க முனைப்பு காட்டாத மா.செ.வின் பதவியை பறித்து சேலம்காரர் அதிரடி காட்டிவிட்டாரே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இலைகட்சியில் கோல்டுக்கு பெயர் போன நிர்வாகி மலராத கட்சியுடன் கூட்டணி அறிவிப்பு காரணமாக கப்சிப் என்று கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவாறு தன்னை காட்டிக்கிட்டாரு.. கட்சி தலைமை உத்தரவிட்டும் எந்த கட்சி பணிகளையும் செய்வதில்லை என்று கட்சிக்காரங்களே ரொம்ப ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தாங்க.. இதனை உன்னிப்பாக கவனித்து வந்த சேலம்காரர் நேரம் பார்த்து கோல்டு நிர்வாகியின் மா.செ பொறுப்பை அதிரடியாக பறித்துவிட்டு புதியவருக்கு வாய்ப்பு வழங்கி விட்டார்..
சட்டமன்ற தொகுதிகள் தோறும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த மேலிடம் அனுப்பி வைத்த நபருக்கும் உரிய ஒத்தழைப்பு வழங்கவில்லை என்பது மேலிட பிரதிநிதி மூலமே தலைமைக்கு சென்றதாம்.. அப்படி வந்த தகவல்கள் எல்லாம் உண்மை என்று தெரிய வரவே பூத் கமிட்டி கூட அமைக்க முனைப்பு காட்டாமல் இருந்தால் எப்படி என கேள்வி எழுப்பி மா.செ. பொறுப்பை சேலம்காரர் பறித்துவிட்டு, அவரை ஆசுவாசப்படுத்த நினைச்சே மாநில பொறுப்பை வழங்கியுள்ளார்களாம்.. சேலம்காரரின் இந்த அதிரடி நடவடிக்கையை ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்பவே பாராட்டுகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post புது தலைவரை மட்டம் தட்டிப் பேசிய மலராத கட்சியின் பழைய போலீஸ்கார தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.