புகையிலை தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ள தமிழக அரசு

1 day ago 4

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

மே 31, 2025 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தழிழக அரசு புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வை தடுப்பதற்காக குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிறப்பு அமலாக்க நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, இலக்கு வைத்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், புகையிலை பயன்பாட்டின் அச்சுறுத்தலைக் கையாள அரசு பன்முக அணுகுமுறையை எடுத்துள்ளது.

•மெல்லக்கூடிய புகையிலை பொருட்களுக்கு மாநிலம் தழுவிய தடை.

குட்கா, பான் மசாலா, கூல் லிப் மற்றும் பிற மெல்லக்கூடிய புகையிலை வடிவங்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 இன் பிரிவு 30(2) (a) இன் கீழ் வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின் கீழ் அவற்றின் கடுமையான உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

•2003 ஆம் ஆண்டு COTPA அமலாக்கம்.

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை சிறார்களுக்கும், கல்வி நிறுவனங்களின் 100 கெஜம் சுற்றளவுக்கும் விற்பனை செய்வது 2003 ஆம் ஆண்டு COTPA சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் சட்டத்தின் பிரிவு 24 (1) இன் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

•கூட்டு அமலாக்கக் குழுக்களை அமைத்தல்.

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தீவிர கவலையைக் கருத்தில் கொண்டு, காவல்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய 391 கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் கல்வி நிறுவனங்கள் அருகே வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

•மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அமலாக்க நடவடிக்கை (19.11.2023 முதல்)

•உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறையால், 5,28,948 கடைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

•உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறையால், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 13,642 கடைகள் மற்றும் வாகனங்கள் கண்டறியப்பட்டன.

•உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறையால், 5,258 கிலோ கூல் லிப் உட்பட 1,78,828 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

•உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறையால், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு 39.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

•உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் 18,409 கடைகள் சீல் வைக்கப்பட்டன.

•மொத்தம் 43,167 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன.

•4,11,227 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

•காவல்துறையினரால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 57,661 தகவல்கள் பகிரப்பட்டன.

இந்த குழுக்களின் செயல்திறன் மற்றும் அறிக்கையிடலை மேற்பார்வையிட மாவட்ட / நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாராந்திர ஒருங்கிணைந்த நடவடிக்கை அறிக்கைகள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன, மேலும் வழக்கமான மறுஆய்வுக் கூட்டங்கள் காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறைகள் மற்றும் உள்ளாட்சித் துறையின் மூத்த அதிகாரிகளால் தலைமை தாங்கப்படுகின்றன.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில், இந்த அமலாக்க முயற்சிகளை ஆதரிக்கவும் ஒத்துழைக்கவும், கல்வி நிறுவனங்களைச் சுற்றி புகையிலை இல்லாத சூழலை நோக்கி பாடுபடவும் அனைத்து குடிமக்களையும் அரசு அழைக்கிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article