பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த, உலகின் 2ம் நிலை வீராங்கனை கோகோ காஃப், 7ம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸ் மோதினர். முதல் செட்டில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மோதியதால் யாருக்கும் வெற்றி கிடைக்காமல் டை பிரேக்கர் வரை சென்றது.
கடைசியில் அந்த செட்டை கீஸ் கைப்பற்றினார். இருப்பினும் அடுத்த இரு செட்களையும், சுதாரித்து ஆடிய காஃப் வசப்படுத்தினார். அதனால், 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற காஃப் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, பிரான்ஸ் வீராங்கனை லோயிஸ் பாய்ஸோன் மோதினர். டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை பாய்ஸோன் வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் எளிதில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்ற பாய்ஸோன் அரை இறுதிக்கு முன்னேறினார்.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காலிறுதி களத்தில் காஃப் அமர்க்களம் appeared first on Dinakaran.