பிராட்டியூர் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாத அபாயகரமான தரைப்பாலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

1 day ago 5

திருச்சி: திருச்சி – திண்டுக்கல் சாலையில அமைந்துள்ள பிராட்டியூர் பகுதியில் இருந்து இனியானூர் செல்லும் சாலையை கோரையாற்றின் கிளை ஆறு கடந்து செல்கிறது. இந்த கிளை ஆறு சாலையில் குறுக்கே கடந்து செல்வதால் சிறிய தரைப்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கிளை ஆறு சுமார் 50 அடி நீளமும், ஆற்றில் இருந்து சுமார் 7 அடி உயரமும் இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. அதில் இருபக்கமும் சுமார் 3 அடி உயரமுள்ள தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் முற்றிலும் இடிந்துவிழுந்துள்ளது. சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த தடுப்பு சுவர் இல்லாமல் இருந்து வரும் நிலையில், இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பலர் அவ்வப்போது நிலை தடுமாறி விழுந்து படுகாயத்துடன் செல்கின்றனர்.

அதற்கு மற்றொரு முக்கிய காரணம், இந்த ஆற்றுப்பாலத்தை கடப்பதற்கு அப்பகுதியில் போதிய வௌிச்சம் இல்லாமல், இருள் சூழ்ந்து இருப்பதால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள், இரவு பயிற்சி வகுப்புகள் முடித்து வீடுகளுக்கு திரும்பும் மாணவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். குறைந்தபட்சம் தினமும் ஒருவராவது இந்த பாலத்தில் விழும் நிலை ஏற்படுகிறது.

எனவே இந்த பாலத்தின் தடுப்புச்சுவரை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் பலர் பாதிக்கப்படுவதை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

The post பிராட்டியூர் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாத அபாயகரமான தரைப்பாலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article