
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், பல்வேறு பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
இரண்டாம் நாளான இன்று காலையில் சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேதியுடன் எழுந்தருளிய கோவிந்தராஜ சுவாமி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகனச் சேவைக்கு முன்னால் பக்தர்களை கவரும் வகையில் பஜனைகள், நடனங்கள் மற்றும் பிற கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திருமலையின் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான துணை செயல் அதிகாரி சாந்தி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.