பாளேஸ்வரம் பகுதியில் சேதமடைந்த ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

2 months ago 14


ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, பாளேஸ்வரம் பகுதியில் சேதமடைந்த ஆரணியாற்றின் கரைகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் உருவான மிக்ஜாம் புயலால் மிக கன மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் ஆற்றின் கரைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரியில் இருந்து இரவோடு இரவாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம், பெரியபாளையம், ஆரணி, ஏ.என்.குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் சேதமடைந்தது. இந்நிலையில், ஆற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க ₹23 கோடி நிதி ஒதுக்கியது, அதன்படி, ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பாளேஸ்வரம், பெரியபாளையம், ஆரணி, பெருவாயல், ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் கரைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பெரியபாளையம் ஆரணியாற்றின் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரைகளில் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்தது. பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி கரைகளை சீரமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.

பெஞ்சல் புயல் மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் பெய்த மழையில், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பாலும் புதிதாக அமைக்கப்பட்ட கரைகள் மீண்டும் சேதமடைந்தது. இந்த சேதமடைந்த கரைகளை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பாளேஸ்வரம் பகுதியில் சேதமடைந்த ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article