
திண்டுக்கல்,
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்துள்ளது. இதுவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இரண்டு முறை சாம்பியனான கோவை கிங்ஸ் வெளியேறி விட்டது. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்து வருகிறது. முதலாவது நடைபெற்ற சேப்பாக் - மதுரை இடையிலான ஆட்டத்தில் சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அதே மைதானத்தில் நடந்து வரும் 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் (0), சுரேஷ் லோகேஷ்வர் (3) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாலசுப்பிரமணியம் சச்சின், விஷால் வைத்யா கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் பாலசுப்பிரமணியம் சச்சின் சேலம் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டிரிக்கு விரட்டி, தனது அதிரடி சதத்தை பதிவு செய்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய விஷால் வைத்யா (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷாருக்கான், சச்சினுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் கோவை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. அணியில் சார்பில் பாலசுப்பிரமணியம் சச்சின் (116) ரன்களும், ஷாருக்கான் (45) ரன்களும் எடுத்தனர். சேலம் அணி சார்பில் சன்னி சந்து, பொய்யாமொழி ஆகியோர் 2 விக்கெட்டுகளும், மொகமது, தேவ் ராகுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சேலம் அணி விளையாடி வருகிறது.