பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

1 week ago 5

சென்னை: சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஃபார்முலா 4 போட்டியை எப்படியாவது நிறுத்த முயற்சித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில் பார்முலா4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை பணியாளர்களுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், பேசிய அவர் கூறியதாவது; விமர்சனங்களை மீறி பார்முலா4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

சாலையில் ஒரு பக்கம் போக்குவரத்தும் ஒரு பக்கம் போட்டியும் நடைபெற்றது. போக்குவரத்து நடப்பதை பார்த்தவர்கள் விமர்சிக்க எதுவும் இல்லை என்ற நிலைக்குச் சென்றனர். எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும் சென்னையில் நடத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான். மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் மிகுந்த பகுதியில் இந்த கார் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது.

கார் பந்தயத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், அதனை படம்பிடித்து பெரிய செய்தியாக்கி விடலாம் என்றும் நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர். போட்டியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கூட சிலர் திட்டமிட்டனர்.ஆனால், கார் பந்தயம் ஒருபுறம் நடந்தபோது, மறுபுறம் போக்குவரத்து சீராக இயங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்த பிறகு, விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்ட ஆரம்பித்துவிட்டனர்.

சிறிய விபத்து நடந்தால் கூட அதை பெரிதுபடுத்த வேண்டும் என்று சிலர் காத்திருந்தனர். பந்தய தடத்திற்குள் நாய்க்குட்டிகள் ஓடி வந்ததைப் பார்த்து இது நாய் பந்தயமா? கார் பந்தயமா? என்று சிலர் விமர்சித்தனர். சென்னையில் நடந்தது பார்முலா4 கார் பந்தயம். பார்முலா1 கார் பந்தயத்தில் கூட சில நேரங்களில் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் உள்ளே வந்துவிடும். இதுபற்றி கூட தெரியாதவர்கள்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விமர்சனங்களை மீறி பார்முலா4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Read Entire Article