பாராட்ட வேண்டிய பசுமை ஏற்பாடுகள்

1 month ago 11

மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கிய தேவை சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருப்பதுதான். பிளாஸ்டிக் பொருட்கள் மழை நீரை பூமிக்குள் அனுப்பாமல் தடுத்துவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடுவதோடு, சுற்றுப்புறத்தையும் அதிக அளவில் மாசடைய வைத்துவிடுகிறது. பொதுவாக மலைப்பிரதேசங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்வது அதிகம். இவ்வாறு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதை அப்படியே தூக்கி எறிந்துவிடுவதால் மலையின் அழகு கெடுவதோடு சுற்றுச்சூழலுக்கும் தீங்காக மாறிவிடுகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரி முதல் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலை அழகுற நீண்டு இருக்கிறது. இந்த மலையில் உற்பத்தியாவதுதான் தாமிரபரணி ஆறு. மேலும் பல சிற்றோடைகள் அங்கிருந்து ஓடி அதன் அடிவாரப்பகுதிகளை வளப்படுத்துகின்றன. எழில் கொஞ்சும் இந்த மலைப்பகுதிகளை மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு, அப்படியே கண்ட இடங்களில் தூக்கி எறிந்து குப்பை தொட்டிகளாக்கி விடுகின்றனர். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு கோடை காலத்தில் மட்டுமல்லாமல் எல்லா காலத்திலும் சுற்றுலா செல்கிறார்கள். இதுபோல பல சிறு, சிறு சுற்றுலா தலங்களும் மேற்கு தொடர்ச்சி மலையை அலங்கரிக்கின்றன.

இயற்கையின் அருட்கொடையான இந்த மலைத்தொடரின் அழகை பராமரிக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு நீலகிரி மலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலை உயிர்கோள் காப்பகம் வரை மக்கள் யாரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டீ கப்புகள், உணவு பொருட்களை சுற்றி கொடுக்கும் பிளாஸ்டிக் ஷீட்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பைகள், ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் குச்சிகளுடன் கூடிய மிட்டாய்கள், பிளாஸ்டிக் கரண்டிகள் உள்ளிட்ட 28 பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. இதற்கு பதிலாக கடைகளில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் டீ, காபி, பானங்கள், உணவு பொருட்களை வழங்கிவிட்டு அந்த மறுபயன்பாட்டு பாத்திரங்களுக்காக ரூ.20 முதல் ரூ.50 வரை டெபாசிட்டாக பெற்றுவிட்டு, அதை திரும்ப கடைக்காரரிடம் ஒப்படைக்கும்போது பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு செயலியையும், இணையதளத்தையும் உருவாக்க வேண்டும்.

முதல்கட்டமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்காக தண்ணீர் ஏ.டி.எம். மையங்களை ஆங்காங்கு நிறுவி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மீண்டும் மஞ்சப்பை திட்டம் போல 'சுற்றுலா பை' ஒன்றை அனைவருக்கும் கொடுக்கலாம். இதில் மறுபடியும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள், பொருட்கள் வாங்குவதற்காக துணிப்பைகள், சுற்றுச்சூழலை பாதிக்காத ஸ்டிராக்கள், நாப்கின்கள், உணவு வைப்பதற்கான பாத்திரங்களை போட்டு வழங்கலாம் என்றும் ஐகோர்ட்டு ஆலோசனை கூறியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கு தொடர்ச்சி மலைக்காக நீதிபதிகள் தெரிவித்த பசுமைக்கு உகந்த ஏற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது. மலைகளின் இளவரசியான நீலகிரிக்கு பிளாஸ்டிக் கட்டுப்பாடுகள் புதிதல்ல. கடந்த 2000-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு, பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகளை கொண்டுவந்தார். தொடக்கத்தில் இது கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில், காலப்போக்கில் அது மங்கிவிட்டது. அதுபோல தற்போதைய நடவடிக்கைகள் இருந்துவிடக்கூடாது. இதை மக்கள் தங்கள் கடமையாக கருதி பின்பற்ற வேண்டும். உள்ளாட்சித்துறையும் அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் இதை செயல்படுத்தி வெற்றி பெற்றவுடன் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தவேண்டும்.

 

Read Entire Article