டெல்லி: பாமக விவகாரத்தில் ராமதாஸுடன் மோதல் முற்றிய நிலையில், டெல்லி சென்றுள்ள அன்புமணி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் ஆணையம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே தொடர் மோதல் வெடித்து வருகிறது. நானே பாமக தலைவர் என்று ராமதாஸ் அறிவித்து, புதிய நிர்வாகிகளை நியமித்து வருவதால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாமக விதிகளின்படி பொதுக்குழுவால் தேர்வான தானே தலைவராக இருக்க முடியுமென அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக மோதலால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை திடீர் பயணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டவை சந்திக்கவும் அன்புமணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டெல்லி சென்றுள்ள அன்புமணி இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரிகளை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையத்தை அன்புமணி நாடுகிறார். பாமகவில் நிலவும் உள்கட்சி பூசலுக்கு இடையே அன்புமணி ராமதாஸ் டெல்லியில் முகாமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பாமகவில் குழப்பம்.. பாமகவில் தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையத்தை நாடுகிறார் அன்புமணி..!! appeared first on Dinakaran.