
சேலம்,
சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
அடுத்து வந்த கேப்டன் பாபா அபராஜித் ஒருபுறம் நிலைத்து விளையாட மறுமுனையில் ஜெகதீசன் (11 ரன்கள்), விஜய் சங்கர் (26 ரன்கள்), ஸ்வப்னில் சிங் (20 ரன்கள்) நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை. விரைவில் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் சுனில் கிருஷ்ணா (32 ரன்கள்) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி வலுவான நிலையை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 180 ரன்கள் அடித்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்க உள்ளது.